மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ் பங்கேற்பு.. துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது, திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எனக்கூறி பதவி ஏற்றுக் கொண்டார். ஸ்டாலின் எதிரில் அமர்ந்திருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இது அங்கிருந்த மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல நிகழ்ச்சியில் மு.க அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர். ஸ்டாலின் பதவி பிரமாணத்தை அடுத்து அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி பிரமாணம் எடுத்து வருகின்றனர். இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் சபாநாயகர் தனபால் பங்கேற்றுள்ளார், அதேபோல காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தினேஷ் குண்டுராவ், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.