“பொறுத்திருந்து பாருங்கள் எங்கள் நடவடிக்கையை” - சவால் விடும் ஓபிஎஸ்..!!
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன.
திமுக சார்பில் நேற்று மதியம் மருதுகணேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்றைய நிலவரப்படி சுயேட்சையாக 35 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் இரட்டை இலை சின்னம் குறித்து முடிவு தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் நடத்துவது தர்மயுத்தம். இதில், எங்களுக்கே வெற்றி கிடைக்கும். சசிகலா தரப்பில் என்ன சதி வேலைகளை செய்தாலும், அதை முறியடித்து நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
விரைவில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். அதையும் நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் இருந்து, காலை 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், வேட்பாளர் மதுசூதனன், அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று, வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.