ops criticizing ttv dinakaran
சசிகலாவின் ஆலோசனை பெற்று கட்சி பணிகளை தொடருவேன் என தினகரன் கூறியதற்கு பொதுச்செயலாளர் நியமனமே செல்லாதபோது தினகரன் எப்படி கட்சியில் நிலைக்க முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகவும் ஒ.பி.எஸ் முதலமைச்சராகவும் தேர்வு செய்யபட்டனர். சில நாட்களுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க ஒ.பி.எஸ்ஸை கட்டாயப்படுத்தி பதவியில் இருந்து விலக வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறைதண்டனை உறுதி செய்யப்படவே தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

தொடர்ந்து ஒ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எடப்பாடி அரசுக்கு பல முட்டுக்கட்டைகளை போட்டது. ஆர்.கே.நகர் பிரச்சனையில் சின்னத்திற்கு போட்டி நிலவியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதையடுத்து இரட்டை இலையை குறுக்கு வழியில் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்டிருந்தார்.
பின்னர் நேற்று ஜாமினில் வெளிவந்த தினகரன், கட்சி பணிகளை தொடருவேன் எனவும் சசிகலாவின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனமே செல்லாதபோது டிடிவி தினகரன் எப்படி கட்சியில் நிலைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தங்களது இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே அணிகள் இணையும் என திட்டவட்டமாக ஒ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
