அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் முட்டலில் இருக்கும் சூழலில், தொண்டர்களைச் சந்திப்பதற்காக சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கிறார் சசிகலா.

அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்த பிறகு சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியை காலி செய்தனர். இரட்டைத் தலைமையாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்தவர்கள், தற்போது எதிரும் புதிருமாக மாறிவிட்டார்கள். ‘ஒற்றைத் தலைமைதான்.. அந்தத் தலைமை நான்தான்’ என்று எடப்பாடி பழனிச்சாமி கிளம்பிவிட்ட நிலையில், நிராயுதபாணியாக கட்சியில் ஆக்கப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ். அதிமுகவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இத்தனை களேபரங்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘ அதிமுகவை கைப்பற்றுவேன், மீண்டும் கட்சியை வழிநடத்துவேன்’ என்று கூறி வரும் சசிகலா தன்னுடைய சுற்றுப்பயணத்தை சைலண்டாக தொடங்க உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26-ம்தேதி பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன். பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறேன்.” என்று அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்..