இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் மத்திய அரசோட ஏஜெண்டுகள்தான் !! கெத்து காட்டும் டி.டி.வி.தினகரன்!!
மத்தியில் ஆளும் பாஜகவின் நிழல் அரசாக அதிமுக செயல்படுகிறது என்றும், இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் மத்திய அரசின் ஏஜெண்டுகள் என்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் பேசினார்.
டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டர்களை சந்தித்து வருகிறார். நேற்று தஞ்சை மாவட்டம் மேலஉளூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திறந்த காரில் நின்று பேசிய டி.டி.வி.தினகரன் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தாக குறிப்பிட்டார்..
மக்கள் தலைவராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தை பாதிக்கக்கூடிய மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் பா.ஜனதாவின் நிழல் அரசாக செயல்படுகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிரை காக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று சட்டப்படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து ஜெயலலிதா பெற்று தந்தார். ஆனால்
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து மக்களை வஞ்சிப்பதாக குறிப்பிட்டார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ்ஐ , சசிகலா முதலமைச்சராக்கினார், ஆனால் அவர் மத்திய அரசின் ஏஜெண்ட் போல செயல்பட்டதால் அவரை நீக்க வேண்0ய சூழல் ஏற்பட்டதாக தினகரன் தெரிவித்தார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக சசிகலா கொண்டு வந்தார். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே அவர் தனது உண்மையான நிறத்தை வெளிகாட்டினார். தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரும் பாஜகவின் ஏஜெண்டு போல செயல்பட்டு வருகிறார் என டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்..
தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தான் தமிழகம் முழுவதும் ஏற்படும். துரோகத்துக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம்.
விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலுக்கும் இங்கே இடம் கொடுக்கமாட்டோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். பஸ் கட்டண உயர்வை குறைப்போம். எனவே ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய ஆதரவு தர வேண்டும் என தினகரன் பேசினார்.