ஆபரேஷன் லோட்டஸ் எல்லாம் ஒர்க்அவுட் ஆகாது…. ஜாலியா சிரிக்கும் குமாரசாமி !!
ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பாஜக எங்கள் எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என கர்நாடகா முதலலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைய போவதாகவும், அதனால் அந்த 3 எம்எல்ஏ-க்களும் மும்பை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமல்லாமல் அதிருப்தியில் உள்ள 12 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் குறித்த வெளியான செய்தி உண்மை இல்லை என தெரிவித்தார். அந்த 3 எம்எல்ஏக்களும் சொந்த விஷயமாக மும்பை சென்றுள்ளார்கள் என தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மும்பை சென்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களும் எங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என கூறினார்.
அவர்கள் எங்களிடம் கூறிவிட்டு தான் மும்பை சென்றன என்றும், அதனால் எங்கள் ஆட்சிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் எங்கள் எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்க பார்க்கிறது என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் இதுக்குறித்து பீதியடைய தேவையில்லை எனவும் . எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும் எனவும் கூறினார்.
பாஜக மேற்கொள்ள முயற்சிக்கும் ஆபரேஷன் லோட்டஸ் எந்தவிதத்திலும் அவர்களுக்கு பயன் அளிக்காது என்ற குமாரசாமி இதுக்குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.