ஜெ. கட்டளைப்படி எதிரிகளை அழிக்க வேண்டும்...! ஜெ. கட்டளையே சாசனம்! பேரவையில் பாகுபலி வசனம் பேசிய ஓபிஎஸ்!
ஜெயலலிதாவின் கட்டளைப்படி எதிரிகளை அழிக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி பட வசனத்தை துணை
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் பேசி இருக்கிறார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். லோக் ஆயுக்தா மசோதாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால் இந்த மசோதா தாக்கல் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர், லோக் ஆயுக்தா மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பிறகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
பேசினார்.
தான் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பற்றி பேசினார். சேலம் 8 வழிச்சாலை குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
சேலம் 8 வழிச்சாலை மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் என்றார். மக்கள் தாங்களாக முன் வந்து சாலைக்காக நிலம் கொடுத்து வருகிறார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழி நடத்திய கட்சி இது. அவரின் வழியைப் பின்பற்றித்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நமக்கு சிலர் துரோகம் செய்து
விட்டனர். நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்ஹாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டளைப்படி எதிரிகளை அழிக்க
வேண்டும். ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி பட வசனத்தைப் பேசி துணை முதலமைச்சர் நிறைவு செய்தார்.