எங்களை தாண்டிதான் நீ சூர்யாவை நெருங்க முடியும்.. நாங்கள் அனைத்திற்கும் தயார்.. கொக்கரிக்கும் தி.வி.க..
இந்நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நடிகர் சூர்யாவை மிரட்டும் வகையில் அவரை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தமிழக அரசும் தமிழக காவல்துறையும் பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் திராவிடர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடி இணையத் தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.. இருளர் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் வேண்டுமென்றே வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் அடையாள குறியான அக்னிசட்டி இடம்பெற்றுள்ளது என்றும், அதேபோல் வில்லனாக வரும் காவலருக்கு திட்டமிட்டு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதுடன், 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கினால் மட்டும் போதாது, சூர்யா வன்னியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் அசாதாரண சூழ்நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று பாமகவினர் நடத்திய போராட்டத்தில் சூர்யாவின் பேனரை செருப்பால் தாக்கி தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிபடுத்தியுள்ளனர். சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் உமாபதி, நடிகர் சூர்யா பற்றி பழனிசாமி கூறிய கருத்து ஜாதி வன்மம் நிறைந்தது என்றார். தமிழ் சினிமாவில் கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான படங்கள் வெளிவந்து தேசிய விருதுகளை குவித்து வருவதாக கூறிய அவர், ஜெய்பீம் படத்தில் வரக்கூடிய ஒரு சில காட்சிகளால் பாமக கட்சியினர் ஜாதி ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பாமகவினர் எந்த அளவிற்கு செல்கின்றனரோ அதே அளவிற்கு நாங்களும் செல்ல தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் பேசிய அவர், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தமிழக அரசும், காவல்துறையினரும் இருப்பதாக அவர் கூறினார்.