கொடநாடு கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது - மேலும் பலர் சிக்குவதாக போலீசார் அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர், கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொல்லை செய்யப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் உள்பட பலர் சிக்கினர். ஆனால், யாரையும் கைது செய்ய முடியவில்லை. டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தார். மற்றொரு குற்றவாளி சயான் காரில் தப்பியபோது, விபத்து ஏற்பட்டு அவரது மனைவி, 5 வயது குழந்தை இறந்தனர். ஆனால், சயான் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், திருச்சூரை சேர்ந்த சதீசன், திபு, சந்தோஷ், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி, மனோஜ் சாமி, வாளயார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடைசி குற்றவாளியான கேரளா திருச்சூரைச் சேர்ந்த குட்ட என்கிற ஜிஜின் என்பவரை கோத்தகிரி போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனறர். கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்ட நிலையில் மற்றொரு குற்றவாளி சயான் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோடநாடு காவலாளி கொலை வழக்கில் ஈடுபட்ட 11 பேர் சிக்கியுள்ளனர். இந்த விசாரணையை தொடர்ந்து மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.