ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தா 2 கிலோ அரிசி இலவசம் ! பிளாஸ்டிக்கை ஒழிக்க முதலமைச்சரின் அதிரடி திட்டம் !!
பிளாஸ்டிக் ஒழிப்பின் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலத்தில் 1 கிலோ பிளாஸ்டிக் அளிப்பவர்களுக்கு 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன் மோகன் இங்கு பதவியேற்றதில் இருந்து பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக குண்டக்கல் மாவட்டத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி, 1 கிலோ பழைய பிளாஸ்டிக் அளிப்போருக்கு, 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.
குண்டகல்லில் உள்ள, குத்தி சாலையில், இதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை, ஆந்திர எம்.பி., ரங்கய்யா, எம்.எல்.ஏ., வெங்கட்ராமிரெட்டி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று, பழைய பிளாஸ்டிக் பொருட்களை அளித்து, அரிசி பெற்று சென்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, முதல் முறையாக, அரிசி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, அரிசி வியாபாரிகள் சிறந்த ஒத்துழைப்பு வழங்கினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.