old woman revealed government officers disdain

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு, 13 கிலோ எடை கொண்ட மனுக்களை தூக்கி மூதாட்டி தூக்கி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிசி தாலுகா கூத்துகுக்டி புதுக்காலனியை சேர்ந்த குண்டுப்பிள்ளை என்ற 62 வயது மூதாட்டி, தனது மகனுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

மூதாட்டியின் மனுவை பெற்ற ஆட்சியர், அவரது குறை குறித்து கேட்டறிந்தார். அந்த மூதாட்டி சொன்ன தகவல் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கை வெட்ட வெளிச்சமாக்கியது. 

குண்டுப்பிள்ளை என்ற அந்த மூதாட்டிக்கு, கடலூர் மாவட்டம் ஐவதுகுடி என்ற கிராமத்தில் 2 ஏக்கர் 40 செண்ட் நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்துவிட்டனர். அதை மீட்டுத்தரக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளார். 11 ஆண்டுகளாக போராடியும் அவரது மனுக்கள் மீதும் கோரிக்கை மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் விரக்தியடைந்த அந்த மூதாட்டி, கடந்த 11 ஆண்டுகளாக தான் கொடுத்த மனுக்களின் நகல்களை எடுத்துக்கொண்டு புதிய மனு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். 11 ஆண்டுகளாக கொடுத்த மனுக்களின் நகல்கள் தான் அந்த 13 கிலோ எடை கொண்ட மூட்டை. இதுவரை கொடுத்த மனுக்களின் நகல்களுடன் புதிய மனு ஒன்றையும் ஆட்சியரிடம் கொடுத்து, தனது நிலத்தை மீட்டுத்தருமாறு கோரினார்.

அப்போது பேசிய அந்த மூதாட்டி, 11 ஆண்டுகளுக்கு முன் நான் குண்டாக இருந்தேன். மனு கொடுக்க அலைந்தே மெலிந்துவிட்டேன் என கூறினார். மூதாட்டியின் கோரிக்கையும் கவலையும் கேட்டறிந்த கடலூர் ஆட்சியர் தண்டபாணி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர கோரி ஒரு மூதாட்டி 11 ஆண்டுகளாக அலைந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் அலட்சிய போக்கைத்தான் இந்த செயல் காட்டுகிறது. இனியாவது அந்த மூதாட்டியின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதா என பார்ப்போம்..