"மத்திய அமைச்சருடனான சந்திப்பு நட்புரீதியானது" சபாநாயகர் தம்பிதுரை பேட்டி
குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணி களில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தல் தேதி ஜூலை 17-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜுன் 14 ஆம் தொடங்கியது.
பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை அடங்கிய கட்சிகளும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதேநேரம் கடந்த 2 நாட்களில் 7 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் கட்சி பின்னணி இல்லாத தனி நபர்கள் 6 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகளில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை பாஜக ஏற்கெனவே அமைத்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையுடன், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று சந்தித்தார்.
டெல்லியில் உள்ள தமது இல்லத்துக்கு தம்பிதுரையை வரவழைத்த, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, குடியரசு தலைவர் பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை நட்புரீதியாக சந்தித்ததாக கூறினார். மேலும் பேசிய அவர், குடியரசு தலைவர் தேர்தல் குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்றார்.
குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள் என்றும் காலம் கனிந்து வரும்போது வேட்பாளர் குறித்து வெளியிடப்படுவார்கள் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.