என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.. புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்..!
என்.ஆர்.காங்கிரஸ் உடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்துள்ளதால் அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் உடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்துள்ளதால் அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். ஆனால், இருகட்சி தரப்பிலும் அமைச்சரவையை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாஜகவினர் கொரோனா காலத்தில் அதிகளவு மக்கள் பணியாற்றி தொற்றினால் பாதிக்கப்பட்டனர். தற்போது எம்எல்ஏ அசோக் பாபுவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக்கூட்டணி புதுச்சேரி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஓரணியில் இருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபட தயாராக இருக்கிறோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. அதற்கான அறிவிப்புகளை முதல்வர் அறிவிப்பார் என்றார்.
அமைச்சரவையில் பாஜக எத்தனை இடம் பெறுகிறது என்று கேட்டதற்கு, "அமைச்சரவையில் எவ்வளவு இடம் என்பது முக்கியமல்ல. எங்களுக்கு பதவி முக்கியமல்ல, அது இரண்டாம்பட்சம்தான். புதுச்சேரி வளர்ச்சிக்காக பாஜக விட்டுக்கொடுத்து, அனைத்து வகையிலும் முதல்வரோடு அமர்ந்து பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. கூட்டணி இருந்தால் விட்டுக்கொடுத்து செயல்படுவதுதான் தர்மம். பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனைத்து வகையிலும் செயல்பட்டு மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.