இந்தியாவின் பொருளாதார நிலைம இப்ப சரியில்ல !! பகீர் கிளப்பும் சுப்ரமணியன் சுவாமி….
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை முழுமையான நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவித்த அக்கட்சியின் எம்.பி. சுப்ரமணியன்சாமி, தற்போது இந்தியாவின் பொருளாதார நிலை சரியில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கதை எனும் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பொருளாதார வளர்ச்சி வாக்குகளை கொண்டு வராது. கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய், இந்தியா ஒளிர்கிறது என்று அரசு சார்பில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை, தோல்வியில் முடிந்தது.
ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக இந்துத்துவா மீதும், ஊழல் இல்லாத அரசு மீதும் நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்தது. அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக வெற்றி பெற இந்துத்துவாதான் துணை புரிந்தது என கூறினார்..
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் கூடுதலாக இன்னும் 5 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும் என பகீர் கிளப்பினார்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என நான் கூறவில்லை. நாங்கள் என்ன கூறினோமோ அதை செய்துமுடிக்க இன்னும் 5 ஆண்டுகள் வேண்டும் என சுவாமி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக நல்ல நிலைமையில் இல்லை. நான் இப்போது நிதிஅமைச்சராகவும் இல்லை. நாட்டில் மக்கள் மீது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளை நீக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.