Nothin happen on karunanithi diamon jublie

தமிழகத்தில் இதுவரை இருந்த இடம் தெரியாமல் காணப்பட்ட பா.ஜ.க. தற்போது புல்திரட்டில் வேகம் காட்டி வருகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு தொடங்கி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வரை தமிழகம் சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளிலும் இக்கட்சித் தலைவர்கள் சுளீர் கண்டனங்களால் அரசை சுட்டெரித்து வருகின்றனர்.

அதுவும் தமிழிசையின் அண்மைக்கால செயல்பாடு டாப் கியரில் பறக்கும் ஹார்லி டேவிட்சன் பைக்கைப் போலத் தெறிக்கிறது.கோவை, திருப்பூர், திருநெல்வேலி என பஞ்சாய் பறந்து வரும் தமிழிசை, தமிழக எதிர்க்கட்சிகளையும், அதிமுக அரசையும் மறந்தும் விமர்சிக்கத் தவறுவதில்லை.

மைக்கை நீட்டினாலே கண்டனம், புகார் என விளாசித் தள்ளி வருகிறார். இந்த வரிசையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் முதலில் கையில் எடுத்தது டாஸ்மாக் விவகாரம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் செயல்பட்டு வருவது தமிழிசைக்கு தெரிந்தும்,தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி ஜூன் 12 ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

தனியார் குடிநீர் உற்பத்தியாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசையின் அடுத்த சப்ஜெக்ட் கருணாநிதியின் வைர விழா. தேசியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு எத்தகைய திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்று சிரிக்காமல் சொல்லி முடித்தார்.