உணவு, பணம் கொடுத்து மாநாட்டிற்கு யாரையும் அழைத்துவரக் கூடாது…. ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்ட கமல்ஹாசன் !!
நடிகர் கமல்ஹாசன் நாளை தொடங்கவுள்ள அரசியல் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்துவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு, பொதுகூட்டம், பேரணி போன்றவற்றில் பங்கேற்க அது எந்தக்கட்சியாக இருந்தாலும் குவாட்டர், பிரியாணி மற்றும் பணம் இல்லாமல் யாரும் கலந்து கொள்வதில்லை.
அதுவும் ஆளும் கட்சியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். குவாட்டரும், கோழி பிரியாணியும் கும்மாளம் போடும். திராவிட கட்சிகள் மட்டுமல்லாமல் சில தேசிய கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தொடங்க உள்ளார். அன்று ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.
மாலையில் மதுரையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கட்சி கொடியை ஏற்றிவைக்க உள்ளார். தொடர்ந்து கட்சியின் கொள்கைகளை அறிவிக்கிறார்.இதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லுக்கு பிப்ரவரி 23-ம் தேதி வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடிகர் கமல்ஹாசன் தொடங்க உள்ள அரசியல் பயணத்தில் பங்கேற்பது குறித்து, திண்டுக்கல் மாவட்ட நடிகர் கமல்ஹசன் நற்பணி இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் கூட்டத்துக்கு விருப்பப்பட்டு வருபவர்களை மட்டும் அழைத்து வரவேண்டும் என்றும் , யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்து வரக்கூடாது என்றும் கமல் ஆணையிட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை முறையாக அனைத்து ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.