நீட் தேர்வு போராட்டங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் நடைபெற்று போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு நேற்று தொடரப்பட்டது.
இந்த போராட்டங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய தேவை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.