எம்ஜிஆர் சிலைக்கு ஒரு மாலை கூட போடல.. ஆனா பேரு மட்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா..! குமுறும் விசுவாசிகள்..!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெங்கு, வெள்ளம் என தமிழகத்திற்கு என்ன பிரச்னை வந்தாலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் இருந்து மட்டும் ஆட்சியாளர்களின் கவனம் சிதறுவதில்லை.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆட்சியாளர்கள் அரசியல் பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால், அரசியல் பேசவில்லை என்றும் அரசின் சாதனைகளைத்தான் பேசுவதாகவும் ஆட்சியாளர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.
எம்ஜிஆர் மறைந்த பிறகும் கூட எம்ஜிஆர் என்ற பெயருக்காகவும் இரட்டை இலை சின்னத்துக்காகவும் கிடைக்கும் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
தற்போது அந்த விமர்சனத்தை உண்மைதான் என ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்ளும்படி ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், வழக்கம்போல, முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு ஒரு மாலை கூட அணிவிக்கப்படாதது எம்ஜிஆர் விசுவாசிகளிடையே மிகுந்த ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு செலவில் அரசியல் பேசும் ஆட்சியாளர்கள், எம்ஜிஆரின் நினைவாக, உண்மையாகவே அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அந்த சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம்.
ஆனால் அப்படி இல்லாமல், விழா என்ற பெயரில் இவர்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பிரச்சார மேடையாகவே நூற்றாண்டு விழா மேடை பயன்படுத்தப்படுகிறது என்று குமுறுகின்றனர் எம்ஜிஆர் தீவிர விசுவாசிகள்.