இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை.. கொலை நகரகமாகிவிட்டது தலைநகரம்.. பாஜக பிரமுகர் கொலைக்கு தலைவர்கள் கண்டனம்.!
சென்னை பாஜக பட்டியலின பிரிவுத் தலைவர் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் இன்று மதவெறி, சமூக விரோதிகளின் கோரப்பிடியில் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொது வெளியில் பாஜக மாவட்ட பட்டியலின தலைவர் பாலச்சந்தர் படுகொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது என பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.
சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்ததையடுத்து தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பாலசந்தர் தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன் சாமிநாயக்கன் தெரு, நித்யா ஹார்டுவேர்ஸ் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றிருந்தார். அப்போது, வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவத்துக்கு பாஜக தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- ``இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை. தி.மு.க அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமான்ய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல். மத்திய சென்னை மாவட்ட பட்டியலின அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழக பா.ஜ.க துணை நிற்கும். இளமையும், துடிப்பும் மிக்க எங்கள் சகோதரனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- கொலை நகரகமாகிவிட்டது சென்னை. இன்று பொது வெளியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் மத்திய சென்னையின் பாஜக மாவட்ட பட்டியலின தலைவர் பாலச்சந்தர் அவர்கள். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. தமிழக காவல் துறை ஏவல் துறையாக மாறியது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை பாஜக பட்டியலின பிரிவுத் தலைவர் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் இன்று மதவெறி, சமூக விரோதிகளின் கோரப்பிடியில் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் தமிழகத்தின் தலைநகரில் நடந்ததாக ஊடகங்களில் செய்தி வந்த நிலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதையே காட்டுகிறது. சற்றுமுன் பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் படுகொலை மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உடனடியாக கொலைக் குற்றவாளிகளை கைது செய்வதுடன், சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனையும் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.