எந்த சூழ்ச்சி செய்தாலும் ஆட்சியை கலைத்துவிட முடியாது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
டெங்கு காய்ச்சலை பிடித்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்றும், மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ய ஒரு காலமும் முடியாது என்றும் சிவகாசியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களை நினைவு கூறும் வகையில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சிவகாசியில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சிவகாசி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் அச்சுத்தொழிலில் சிறந்து விளங்கும் நகரமாக சிவாகாசி இருக்கிறது. சிவகாசியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ரூ.234 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி அழிந்துவிடும் என நினைத்தவர்கள் வாயடைத்துப் போயுள்ளார்கள் என்றார். இன்னும் 100 ஆண்டுகள் கடந்தும் அதிமுக ஆட்சி நிலைத்து நிற்கும் என்றும் அவர் கூறினார்.
எதிர்கட்சி தலைவர் புதுசு புதுசாக கண்டுபிடித்து பேசி வருகிறார். தற்போது டெங்கு காய்ச்சலை பிடித்துக் கொண்டு பேசி அரசியல் செய்கிறார். அவர் அரசியல் பண்ண ஒரு காலமும் முடியாது என்றும் காலநிலை மாறுபாட்டின்போது டெங்கு போன்றவைகள் நிகழும் என்றார்.
இதனை அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எம்.ஜி.ஆர். கண்ட கனவை, ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கொண்டு இந்த ஆட்சியை தொட முடியாது என்று கூறினார். எந்த சூழ்ச்சி செய்தாலும் இந்த ஆட்சியை கலைத்துவிட முடியாது என்றார்.
இந்த அரசு மக்களுக்கு துணை நிற்கும் அரசு என்றார். லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிமுகவுக்கு துணையாக இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.