இனி வருஷத்துக்கு 2 தடவை மட்டும்தான் சாமி தரிசனம்…. திருப்பதியில் கட்டுப்பாடு !!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என ஆந்திர மாநில அறநிலைத்துறை அமைச்சர் மாணியக்லாயராவ் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே நிற்காமல் சென்றால் பக்தர்கள் 1/2 நிமிடம் வரை சுவாமி தரிசனம் செய்ய கூடிய நிலையுள்ளது.
பல்வேறு சிபாரிசுகளின் படி ஒருவரே பலமுறை தரிசனம் செய்து வரும் நிலை இருப்பதால், தேவஸ்தான அதிகாரிகள் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒருவர் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் தரிசனம் செய்யும் விதமான நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கயால ராவ், ஆதார் கார்டு மூலம் ஒரு ஆண்டில் முதல் முறை வரும் பக்தர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அதன் பின்னர் வாய்ப்பு இருந்தால் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விதமாக மென்பொருள் தயார் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார்.
ஆண்டில் இரண்டு முறை மட்டும் தரிசனம் செய்யும் விதமாக செய்தால் மேலும் பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பது தனது யோசனை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கூட்ட நெரிசலை சமாளிக்க வழியை தேடுவதை விட்டு விட்டு, பக்தர்கள் இத்தனை முறை தான் கடவுளை தரிசிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஒரு மணி நேரத்தில் சாதாரண பக்தர்கள் 5000 பேர் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். அப்படி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களை ஒரு நிமிடம் கூட பார்க்க அனுமதிப்பதில்லை. 100 அடி தூரத்திலிருந்து தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இருந்தும், வரிசையில் செல்லும் போதே ஊழியர்கள் இழுத்து விடுகின்றனர். இதனால் சுவாமியை சரியாக தரிசனம் கூட செய்ய முடிவதில்லை.
ஆனால் விஐபி தரிசனம் என்ற பெயரில் விஐபி பிரேக் விடப்படுகிறது. இந்த விஐபி தரிசனம் நடக்கும் நேரத்தில் 10,000 சாதாரண பக்தர்கள் தரிசிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது..
விஐபி.,களுக்கு ஆறு மாதம் ஒரு முறை தான் தரிசனம் என விதியை மாற்றுவதை விட்டு சாதாரண பக்தரகளை கட்டுப்படுத்துவது தவறு என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.