நிதின் கட்கரி பிரதமரா ? ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்தால் பரபரப்பு !!
மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெறும் என தெரிய வந்துள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷியை நிதின் கட்கரி சந்தித்துப் பேசியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதின்கட்கரி பிரதமாக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்று குறிப்பிட்டுள்ளது. சிலவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றுள்ளது.
ஆனால், இந்த முடிவுகள் எதுவும் இறுதியானது கிடையாது. இருப்பினும் இதன் பிரதிபலிப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். பிரதமர் மோடியின் தலைமையில் தான் இந்த தேர்தலை சந்தித்துள்ளோம். எனவே மீண்டும் அவரது தலைமையில் தான் ஆட்சி அமையும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்கள் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் வெளிப்பாடு தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷியை, நாக்பூரில் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். பிரதமர் பதவிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயரும் அண்மைக்காலமாக அடிபட்டு வருவதால் இந்த சந்திப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.