நெருப்பின் அடுத்த இலக்கு ஆள்வோர் வட்டாரம்தான்: தூக்கி வாரிப்போடும் ஜோதிட கணக்குகள்.
எந்த நிகழ்வையுமே சென்டிமெண்டோடு இணைத்துப் பார்க்கும் தமிழகம், குரங்கணி தீ விபத்தை மட்டும் ச்சும்மா கடந்து போய்விடுமா? நடக்கும் ஆட்சி மீதான கோபங்களே இப்படி அனல் வடிவத்தில் வெளிப்படுகின்றன! என்கிறார்கள் ஜோதிடத்தில் உழலும் நபர்கள் சிலர்.
இதற்காக குரங்கணி விபத்துக்கு முன்பாக, மதுரை மீனாட்சி கோவிலினுள் ஏற்பட்ட தீ விபத்தையும், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சில கோயில்களில் சிறிதும், சற்றே பெரிதுமாக நடந்த தீ விபத்துக்களையும் சுட்டிக் காட்டி வலு சேர்க்கிறார்கள்.
நடக்கும் நிர்வாகம் நல்ல முறையில் செல்லவில்லை, ஆட்சி கட்டமைப்பில் இருக்கும் பலர் சுய வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுவது, தேவையற்ற வகையில் அரசு நிதியை சலிக்க சலிக்க பயன்படுத்துவது! என்று முறைகேடுகளின் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த மண்ணில் உருவாகும் எதிர்மறை வைபரேஷேன்களின் வெடிப்பே இப்படி அனல் பிழம்பாக அடிக்கடி நடக்கிறது! என்கிறார்கள் ஜோதிடர்கள்.
சரி! தவறு செய்பவர்கள் ஆட்சியாளர்கள் என்றால் அவர்களைத்தானே தண்டிக்க வேண்டும், அப்பாவி மக்கள் தீயில் கருகியது ஏன்? என்று இதற்கு குறுக்கு கேள்வியை கேட்டால், ‘அன்று மீனாட்சி கோவிலினுள் தீ பற்றியபோது எந்த மனிதருக்கும் சிறு காயம் கூட இல்லை. தெய்வம் தனது இல்லத்தில் ஒரு பகுதியை எரித்துக் கொண்டு ஆட்சியாளர்களுக்கு தன் கோபத்தை குறிப்பால் உணர்த்தியது. மாறவில்லை அவர்கள். அடுத்து குரங்கணியில் சில உயிர்களை விழுங்கி அடுத்த அறிகுறியை காட்டியிருக்கிறது. இதிலும் திருந்தவில்லையென்றால் அதிர்ச்சி தரக்கூடிய பேரிழப்புகள் ஆட்சியிலிருப்போர் வட்டாரத்தில் நடக்கும் வாய்ப்புகள் அதிகம்!
இது சாபமில்லை, ஜோதிட யதார்த்தம்!’ என்கிறார்கள்.
இதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிவதில்லை, புறம் தள்ளிவிடவும் முடியவில்லை! என்பதே பொதுமக்களின் மன ஓட்டம்.