எங்களையே முந்தி விட்டீர்களா..? டிடிவி ஆதரவாளர்கள் மீது பாய்ந்த அதிமுகவினர்...!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னிலையில் பெற்று வருகிறார். இதில் அதிர்ச்சியான அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் டிடிவி ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் மோதல் நீடித்து வருகிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இவர்கள் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ராவும் பகலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஓட்டுப்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இதில், முதல் சுற்றில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் உள்ளார். மூன்றாம் இடத்தில் திமுக மருதுகணேஷ் உள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அதிமுக இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றன்ர். தடுக்க முயன்ற டிடிவி தரப்புக்கும் அதிமுகவினருக்கும் இடையே அடிதடி நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.