அடுத்து இபி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி அரசு!!
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிற்சங்கங்கள் வரும் 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்
மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது இதை கண்டித்து கடந்த மாதம் 23-ந் தேதி அன்று சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பை வெளியிட்டன.
இந்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாக கடந்த மாதம் 22-ந் தேதி அன்று தொழிலாளர் ஆணையரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்த கொண்டனர். அப்போது வரும் 12-ந் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அதனை மீறும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். எனவே வரும் 16-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி வரும் 12-ந் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் காணாத பட்சத்தில் வரும் 16-ந் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளான நிலையில் தற்போது மின்வாரிய தொழிலாளர்களும், வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்திருப்பதால் எடப்பாடி அரசு விழி பிதுங்கி நிற்கிறது.