தருமபுரி மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான புதிய கல்லூரி.. ககன் தீப் சிங் பேடி உத்தரவு.
கும்முனூர் கிராமத்தில் 37.4 ஹெக்டேரில் அமைய உள்ள அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிக்கு ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகவும், கல்லூரியானது தற்காலிகமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான புதிய கல்லூரி தொடங்கப்படுவதாகவும், நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட கும்முனூர் கிராமத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலையில் பட்டயப் படிப்புகளை பயிற்றுவிக்கும் புதிய அரசு கல்லூரி தொடங்குவதற்கான அரசாணையை வேளாண்மைத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
கும்முனூர் கிராமத்தில் 37.4 ஹெக்டேரில் அமைய உள்ள அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிக்கு ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகவும், கல்லூரியானது தற்காலிகமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என்றும், நடப்பு கல்வியாண்டில் இருந்தே கல்லூரி செயல்படத் தொடங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையில் 40 மாணவர்களையும், தோட்டக்கலைத் துறையில் 40 மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும், 12 உதவிப் பேராசிரியர்கள், 6 பணியாளர்களையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பணியமர்த்திக் கொள்ளலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேவையான விடுதி வசதியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வேளாண்மைத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.