அடுத்துடுத்து கருணாசை கார்னர் பண்ணும் இபிஎஸ் அரசு !! சாலிகிராம வீட்டை சுற்றி வளைத்துள்ள நெல்லை போலீஸ் !!
அடுத்தடுத்து வழக்குகள் போட்டு கருணாசை தமிழக அரசு கார்னர் செய்து வரும் நிலையில் நெல்லை தேவர் பேரவையைச் சேர்ந்த முத்தையா என்பரின் காரை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கருணாசின் சாலிகிராம வீட்டை நெல்லை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
கடந்த 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் , முதலமைச்சரையும், காவல் துறையினரையும் அவதூறாக பேசியதாக 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அவரை கைது செய்ய நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கருணாசை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் கருணாஸ் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவர் வெளியே வந்த பிறகு தமிழக அரசையும், முதலமைச்சரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் நெல்லையில் தேவர் பேரவைச் சேர்ந்த முத்தையா என்பவரது காரை சேதப்படுத்திய வழக்கில் கருணாசைத் தேடி 50 க்கும் மேற்பட்ட போலீசார் இன்று திருநெல்வேலியில் இருந்து வந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு கருணாசின் சாலிகிராம வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். ஆனால் கருணாஸ் அங்கு இல்லாததால் அவர்கள் வெளியேறினர். ஆனாலும் கருணாசிடம் இது குறித்து விசாரணை நடத்தவோ அல்லது கைது செய்யவோ போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.