நீட் தேர்வுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள குழு திமுகவின் குழுவா? தமிழக அரசின் குழுவா? என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கரு.நாகராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கிறது. நீட் வழக்கில் தெளிவாக ஆராயப்பட்டு, யாருக்கும் பாதிப்பில்லை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அம்சங்களை ஆராய்ந்துதான் நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை அவரும் எதிர்க்கவில்லை. தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் நீட் வேண்டாம் எனச் சொல்லும் ரவீந்திரநாத் இக்குழுவில் உள்ளார். ஆனால், அவரும் எதிர்க்கவில்லை.
இக்குழு நடத்திய கருத்துக் கேட்பில் 85 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு கணினியில் இருந்தே எத்தனை பேர் வேண்டுமானலும் வந்து கருத்து தெரிவிக்கலாம். ஒருவரே கூட பல முறை கருத்து சொல்லலாம். இது திமுகவின் குழுவா? தமிழக அரசின் குழுவா? தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என்பதற்காக ஒப்புக்கு நடிக்க இக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் தேர்வு இதுதான்.
இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இதுதொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் ஆய்வு செய்யாமலா தீர்ப்பு வழங்கினார்கள்? இது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல்” என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred