'சின்னத்தை முடக்கும் எண்ணம் இல்லை' - ஒப்பிக்கும் பார்லிமென்ட் சிங்கர் நவநீதகிருஷ்ணன்
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவது குறித்து வாதங்களை முன்வைக்கவில்லை என சசிகலா தரப்பு ஆதரவாளர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தேர்தல் என்று வந்து விட்டாலே எப்பொழுதும் அதிமுகவுக்கும் திமுகவும் இடையே தான் பலத்த போட்டி நிலவி வரும். ஆனால் அந்த டிரன்ட் மாறி தற்போது அதிமுகவிற்கு உள்ளேயே போட்ட போட்டி நடைபெற்று வருகிறது.
அதற்கு ஏற்றார் போல், தமிழகத்தில் உள்ள கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பிரிந்துள்ள சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
அதற்கான இருதரப்பு வாதங்களையும் தேர்தல் ஆணையம் இன்று கேட்டறிந்தது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நவநீதகிருஷ்ணன் எம்.பி, இரட்டை இலையை ஒதுக்குவது தொடர்பாக மட்டுமே வாதங்கள் வைக்கப்பட்ததாகவும், இரட்டை இலையை முடக்குவது குறித்து வாதங்கள் முன் வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அதிமுக சட்டமன்ற குழுதான் ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.