பாண்டியராஜன் பாணியில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ, வாக்காளர்களின் எண்ணப்படி நடப்பேன் என தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நகர்ந்து கொண்டிருக்க ஒவ்வொரு நிமிடமும் கிரிக்கெட் ‘ரன்னிங் கம்மேன்டரி’ போல் யார் பக்கம் யார் செல்கிறார்கள் என்ற பரபரப்பான கட்டத்தை நோக்கி அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை சசிகலாவுக்கு செலவும் ஓ.பி.எஸ்க்கு வரவும் அதிகரித்துள்ளது.
ஒரு அமைச்சர் 3 எம்.பிக்கள், 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட முழுவதிலும் இருந்து காட்சிகாரர்கள் ஆதரவு என ஓ.பி.எஸ் வீடு கலை கட்டி வருகிறது.
இன்று மாலை மேலும் சில எம்.பிக்கள், அமைச்சர்கள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பல எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் ஓ.பி.எஸ்க்கு நேரடியாக வந்து ஆதரவு தர முடியவில்லை என ஓ.பி.எஸ் தரப்பில் கூறுகின்றனர்.
இந்நிலையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்க்கு அதரவு அளித்து விட்டார் என்று நேற்று பரபரப்பாக செய்தி ஒன்று வெளியானது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏவுமான முன்னாள் டி.ஜி.பியுமான நட்ராஜ் இதுவரை முடிவு எடுக்காமல் குழப்பத்தில் ஆழ்ந்ந்துள்ளார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட பல்வேறு வி.ஐ.பி.க்கள் முயன்ற போது சசிகலா தரப்பு எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா நடராஜுக்கு வாய்ப்பு அளித்தார்.
அதன்பின்னர், ஜெயலலிதா நடராஜை நியமிப்பார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் சசிகலா தரப்பு முட்டுக்கட்டை போட்டதால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை
ஜெயலலிதா இருந்தவரை அவரது ஆதரவில் இருந்த நட்ராஜ் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரண்டு மூன்று நாள் யோசனை செய்து சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது அரசியல் சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் நடராஜ் இருக்கிறார்.

தனது ஆதரவாளர்களுடன் வட்ட செயலாளர் ஒருவர் வீட்டில் அமர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நடராஜ் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து வருகிறார்.
தனது முகநூலில் தனது நிலைப்பாட்டை நடராஜ் தெரிவித்துள்ளார். அதில் தனது ஒரே தலைவர் ஜெயலலிதா எனவும் அவர் வழியில் நடப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
எனது ஆதரவை யாருக்கு தரப்போகிறேன் என்பதை தொகுதி மக்களின் விருப்படி முடிவெடுப்பேன். நான் ஓடி ஒளிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நான் எங்கேயும் செல்லவில்லை. எனது சட்டமன்ற அலுவலகத்தில் தான் உள்ளேன். பொதுமக்கள் வந்து தாராளமாக சந்திக்கலாம். கருத்து தெரிவிக்கலாம்.
மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் நான் மக்களுக்காக அவர்கள் விருப்படி முடிவெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் கருத்து தெரிவித்த மாஃப பாண்டியராஜன் பின்னர் ஓ.பி.எஸ்வுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
