திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் கிடையாது..! உச்சநீதிமன்றம் புது உத்தரவு
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக உச்சநீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விதிகளை வரையறுக்க அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடும் முன்னர் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்ற பழையை உத்தரவு திருத்தப்படுகிறது. தேசிய கீதம் இசைப்பது தொடர்பான விதிகளை வரையறுக்க மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழு இறுதி முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.