Asianet News TamilAsianet News Tamil

சசிகலா தாய் அல்ல பேய்.. முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு

சசிகலா தாய் அல்ல பேய் என்று அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
 

natham viswanathan criticizes vk sasikala is a devil for admk
Author
Dindigul, First Published Jun 19, 2021, 7:50 PM IST

சசிகலாவை அதிமுகவிலிருந்து ஓரங்கட்டிவிட்டு, ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டுத்தலைமையில் அதிமுக வழிநடத்தப்பட்டுவருகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக, சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொண்டுவிட்டது. இனிமேல் சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் கிடையாது என்பதே அதிமுக சீனியர் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், மீண்டும் அதிமுகவை கைப்பற்றி தலைமையேற்று வழிநடத்தப்போவதாக, சசிகலா சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அதிமுக தலைமையும் எதிர்வினையாற்றியது.

natham viswanathan criticizes vk sasikala is a devil for admk

இந்நிலையில், சசிகலா தாய் அல்ல பேய் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சசிகலாவிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது, அவரிடம் யாரும் பேசக்கூடாது. அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,  சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அவரது செயல்பாடு வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் ஈபிஎஸ், ஓபிஎஸ் திகழ்கின்றனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான். அதிமுக நல்ல தலைமையால் தான் வழிநடத்தப்படுகிறது. 

natham viswanathan criticizes vk sasikala is a devil for admk

இந்த நேரத்தில் கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்துகொண்டிருக்கிறார். சசிகலாவை ஜெயலலிதாவே நீக்கினார். அதிமுக வலிமையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. அதற்கு காரணம் சசிகலா தான். ஜெயலலிதா தனது நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை நம்பினார். ஆனால் சசிகலா அந்த நம்பிக்கைக்கு இணக்கமாக நடக்கவில்லை. துரோகம் தான் செய்தார். ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். சசிகலாவின் உறவினர்கள் தான் கட்சியில் அதிகாரம் செலுத்தினார்கள். தற்போது கட்சி நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறது. 

natham viswanathan criticizes vk sasikala is a devil for admk

சசிகலா தன்னை தாய் என்று கூறிக்கொள்கிறார். அதிமுகவை பொறுத்தவரை அவர் தாய் அல்ல பேய். இந்த சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். அதிமுகவினர் யாரும் திண்டுக்கல் மாவட்டத்தில் சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில மாயையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மாயயை  உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று பேசினார் நத்தம் விஸ்வநாதன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios