"நீட் தேர்வு விலக்கு தமிழகத்தை ஏமாற்றும் வேலை" - சீறும் நடராஜன்!!
நீட் தேர்வு, ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழகத்தை ஏமாற்றும் வேலை என்றும், மாநிலத்தை ஆக்கிரமிக்கும் விதமாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக மாணவர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியையும் அளித்த பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு, தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்தார்.
மத்திய அரசு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளது என்று கூறினார். தமிழகத்துக்கு நீட் ஓராண்டுகால விலக்கு குறித்து, தமிழக அரசின் சட்ட முன் வடிவு, நாளை மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றார்.
இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதலமைச்சர் எடப்பா பழனிசாமி, அதமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸடாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், நடிகர் கமல் ஹாசன், அதில், நீட் தேர்வு ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர்கள் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்று சாடியுள்ளார்.
புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் இது தொடர்பாக தெஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீட் தேர்வு ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழகத்தை ஏமாற்றும் வேலை என்று கூறியுள்ளார்.
மாநிலத்தை ஆக்கிரமிக்கும் விதமாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ம. நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.