கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது வரலாற்றுப்பிழை; சொல்கிறார் தொல். திருமாவளவன்!
சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது வரலாற்றுப்பிழை என்றும், இது ஆளும் கட்சிக்கு அவப்பெயரையும், அவதூறையும் ஏற்படுத்தும் என்றும் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடத்தப்பட்டது. தற்போது, மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி சிலை, சென்னை மெரினா கடற்கரை சாலையில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிலை ஆகும்.
அந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி தமிழக அரசால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் சிவாஜி மணிமண்டப திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஆனால், சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது.
இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கருணாநிதியின் பெயரை அகற்ற வேண்டும் என்பதற்காகவே, கடற்கரை சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டதாக கூறினார்.
மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் பிரபு பேசும்போது, சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதியின் பெயர் அமைய வேண்டும் என்று அப்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது அநாகரிகம் என்று எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை, ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
சிவாஜி கணேசன் சிலையை நிறுவிய கருணாநிதியின் பெயரை அப்புறப்படுத்துவது வரலாற்றுப்பிழை என்று கூறினார். கருணாநிதியின் பெயரை அகற்றுவது ஆளுங்கட்சிக்கு அவப்பெயரையும், அவதூறையும் உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும், டெங்கு காய்ச்ச்ல பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்