பரிதவிப்பவர்களோ 18 பேர்... இவரோ எம்.எல்.ஏ.! தினகரனை கிழித்தெறியும் நமது அம்மா!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் அதிமுகவில் இணைய வருமாறு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் மறைமுக
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களும் பரிதவித்து கிடக்க ஜெ.வால் வெறுக்கப்பட்டவரோ எம்.எல்.ஏ. ஆகிவிட்டார் என்றும் டிடிவி தினகரன் பற்றி
கவிதையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடந்த ஆண்டு தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து பேரவை தலைவர் தனபால் உத்தரவிட்டார் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய பென்ச், கடந்த 14 ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தது.
சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினகரன் ஆதரவாளர்கள், அதிமுகவில் இணையப்போவதாக கூறப்படுகிறது. மீண்டும் அதிமுகவில் இணையப்போவதில்லை என்று தினகரன்
ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவினரும் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில், நேற்று இன்று நாளை என்ற தலைட்பபில் கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த கவிதையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள், அதிமுக நிழலில் ஒதுங்க ஜெயலலிதா ஆன்மா அனுமதிக்காது என்று சசிகலா குடும்பத்தினர் பற்றி முறைமுகமாக குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது பரிந்துரையால் வெற்றி பெற்றவர்கள், அவர் வெறுத்த கூட்டத்திடம், தஞ்சமடைந்து தவறிழைத்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்து விட்டனர்.
18 பேரும் பரிதவித்து கிடக்க, ஜெயலலிதாவால் வெறுக்கப்பட்டவர் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார் என்றும் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நரி சூழ்ச்சியை உணர்ந்து ஒன்றாகி எழுவதுதான் நன்றி கொண்டோர் காரியம் என்றும் அது நடக்கட்டும் சீக்கிரம் என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தலைமை கழகத்தில் மீண்டும் இணைய வருமாறு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.