மீண்டும் களத்துக்கு வரும் நாம் தமிழர்... சின்னத்தை உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம்..!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக கட்சி இரு அணிகளாக போட்டியிடுகின்றன.
சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிகள், இந்த முறையும் திமுகவின் தயவிலேயே களமிறங்குகின்றன. அதேவேளையில், அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக மட்டுமே இடம்பெற்றுள்ளன. பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
பாமகவை போல சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.