எனது மகள், பிளஸ்2-வில் எடுத்த மதிப்பெண் தெரியாது; டிவி நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமியின் திணறல் பதில்!
நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது முகநூல் பக்கத்தில், தனது மகள் மருத்துவம் படிக்க அப்போதைய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா உதவி செய்ததால்தான் அவர் மருத்துவம் படிக்க முடிந்தது. அந்த நன்றிகூட கிருஷ்ணசாமிக்கு இல்லை என்றும், அதற்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதை எப்படி இருந்தது என்பது குறித்தும் பதிவிட்டிருந்தார். முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லாவும் உண்மை என்று கூறியிருந்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் நேர்காணல் நடத்தியது.
இது தொடர்பாக பதிலளித்த கிருஷ்ணசாமி, அப்போது சட்டமன்றத்தில் இது குறித்து நான் மறுத்து பேசியது சட்டமன்ற பதிவேட்டில் பதிவாகவில்லை என்றார். சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு என்ன தெரியும் என்றும் ஜால்ரா போடுவார் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், கடந்த 2002 ஆம் ஆண்டே தனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டார் என்றும், அவர் தகுதிக்குமேலே மதிப்பென் வைத்திருந்தார் என்றும் கூறினார். எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்ற கேள்விக்கு, தெரியவில்லை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.