ஸ்டாலின் சார் நிச்சயம் எனக்கு போன் செய்வார்.. முதல்வரை முகக்கவசம் கழற்ற சொன்ன பெண் நம்பிக்கை.
நாங்கள் அவரின் முகத்தை பார்க்க விரும்பினோம், அதனால் முகக்கவசம் கழற்றச் சொல்லி கேட்டவுடன் அவர் முகக்கவசத்தை கழற்றினார். அவரது முகத்தைப் பார்த்து பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் எனக்கு போன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சரை முகக் கவசம் கழற்றச் சொல்லி ரசித்த பெண் கூறியுள்ளார் தான் அவரிடம் கொடுத்த விண்ணப்பத்தில் தனது பெயரையும் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருப்பது அகவம் அந்தப் பெண் கூறியுள்ளார்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கிருஷ்ணகிரி சென்றிருந்த முதலமைச்சர் கான்வாயை இடைமறித்த பெண் ஒருவர் அவரின் முகக் கவசத்தை கழற்றச் சொல்லி, அவரைப் பார்த்து பூரித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் விழா முடிந்து உழவர்சந்தை சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்ற அவரது காரை பார்த்த தொண்டர்களும், பொதுமக்களும் சிலர் அவரைப் பார்த்து கையசைத்தார்.
பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்றுகொண்டிருந்த அவரின் வாகனம் பெண்கள் சிலர் தனியாக நின்று பார்ப்பதை கண்டு நின்றது. அப்போது சாலையில் காத்திருந்த ரம்யா 42 என்ற பெண், முககவசம் அணிந்திருந்த முதல்வரிடம், " சார் உங்கள எப்ப சார் பார்க்கிறது" "தயவு செய்து ஒருமுறை மாஸ்க்கை கழட்டுங்க சார்" என்றவுடன் அவரும் புன்முறுவலுடன் மாஸ்க்கை கழட்டி புன்னகை உதிர்த்தார். அவரின் முகத்தைப் பார்த்து பூரித்துப்போன அந்தப் பெண், அயராத உழைப்பு... விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றியின் மறுபெயர்தான் ஸ்டாலின் என முழங்கினார். அதைக்கேட்ட முதல்வரும் சிரித்தவாறே அவர்கள் கொடுத்து விண்ணப்பை பெற்று, நன்றி கூற அங்கிருந்து விடை பெற்றார்.
முதல்வரிடம் சகஜமாக பேசி அவரை முகக்கவசம் கழற்ற வைத்த அந்தப் பெண் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஓசூர் பழைய டெம்பிள் ஹாட்கோவை சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மனைவிதான் ரம்யா (42) இவர் அங்குள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஓமன் நாட்டில் பணியாற்றி தற்போது ஓசூரில் வேலை செய்து வருகிறார். நேற்று முதல்வரை சந்தித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள ரம்யா, எங்கள் குடும்பம் இயல்பாகவே திமுகவின் மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் பற்று கொண்டது. நேற்று முதல்வர் வருகிறார் என்ற செய்தி அறிந்தவுடன், எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டுமென்ற ஆர்வத்தில் அவர் வரும் வழியிலேயே சாலையில் காத்திருந்தோம். பெண்கள் தனியாக சாலையோரம் நிற்பதை பார்த்த முதல்வர் வாகனம் நாங்கள் விரும்பியபடியே நின்றது.
நாங்கள் அவரின் முகத்தை பார்க்க விரும்பினோம், அதனால் முகக்கவசம் கழற்றச் சொல்லி கேட்டவுடன் அவர் முகக்கவசத்தை கழற்றினார். அவரது முகத்தைப் பார்த்து பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது, அதேநேரத்தில் முதவரிடம் நான் கொடுத்த விண்ணப்பத்தில் என் பெயர் மொபைல் எண் குறிப்பிட்டிருக்கிறேன். நிச்சயம் அவர் எனக்கு போன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. என அந்தப் பெண் கூறியுள்ளார்.