சும்மா பட்டையக் கிளப்பும் பணப்பட்டுவாடா ! சூலூரில் தீவிரம்!! ஒரு ஓட்டுக்கு எவ்வளவு தெரியுமா ?
சூலூர் , அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை மறுநாள் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சூலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தீவிரமடைந்துள்ளது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வருகின்ற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கெனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றிருக்கும் நிலையில், தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான தேர்தலாக இது கருதப்படுகிறது.
சூலூரில் பல கட்சிகள் போட்டியிட்டாலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமமுகவும் கடுமையாக டஃப் கொடுத்து பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் இந்த தொகுதியில் வழக்கம்போல முக்கிய கட்சிகள் பணப்பட்டுவாடா பணியைத் தொடங்கிவிட்டன. பணம் வழங்குவதற்கான பட்டியலை அ.தி.மு.க ஏற்கெனவே தயாரித்துவிட்டது.
நாளை மறுநாள் இந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா தீவிரமடைந்துள்ளது., சூலூரைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் வீட்டுக்குச் சென்று பணம் வழங்குவதில்லை.
அதற்குப் பதிலாக அந்தந்திப் பகுதிகளில் தங்களது பூத் ஆபீஸ் உள்ளிட்ட ஏதேனும் இடத்துக்கு சீக்ரெட்டாக வரவழைக்கின்றனர். ``பூத் ஸ்லிப் வாங்கியாச்சா?" இதுதான் கோட் வேர்டு. அவர்கள் சொல்லிய இடத்துக்குச் சென்றவுடன், வாக்காளர் பட்டியல், வரிசை எண், முகம் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பிறகே பணம் கொடுக்கின்றனர்.
லோகல் நபர் ஒருவர் கை காட்ட, வெளியூர் நபருக்குத்தான் பணம் கொடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் ரூ.2,000 முதல் 3,000 வரையும், தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வில் ரூபாய் 1,000 முதல் 2,000-மும் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.