சீன அதிபரே வருக..! தமிழில் ட்வீட் செய்து அசத்தும் பிரதமர் மோடி..!
தமிழகம் வந்துள்ள சீன அதிபரை வரவேற்று பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் தமிழ்நாட்டில் இருக்கும் மாமல்லபுரத்தில் இன்று மாலை மற்றும் நாளை காலை சந்தித்து பேச இருக்கின்றனர். இதற்காக இன்று காலை பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்றடைந்த பிரதமர் அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.
பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் சீன அதிபர் சென்னை வந்ததடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், இசை வாத்தியங்கள் முழுங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிண்டியில் இருக்கும் ஐடிசி ஹோட்டலில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். மாலை பிரதமர் மோடி அவரை வரவேற்க இருக்கிறார்.
இந்த நிலையில் சீன அதிபரை வரவேற்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே இந்தியாவிற்கு வருக வருக என வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் பிரதமர் வரவேற்றுள்ளார்.
பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்திருப்பது தமிழர்களை பெருமையடைய வைத்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.