தேசத்தின் தந்தையாக மோடியை ஏற்காதவர்கள், இந்தியர்களே இல்லை: மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
பிரதமர் மோடி இந்தியாவின் தந்தை’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதை பெருமையாக நினைக்காதவர்களை இந்தியர்களே இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
v
நியூயார்க் ஐ.நா. சபையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப் பேசுகையில், " இந்தியாவுக்கு பிரதமராக மோடி வந்தபின்பு தான் குழப்பங்கள், சண்டைகள், மோதல்கள் தீர்க்கப்பட்டு, மக்கள் அனைவரையும் ஒரு தந்தையைப் போல் ஒருங்கிணைத்துள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று அழைக்கலாம்" என குறிப்பிட்டார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “பிரதமர் மோடியால்தான், வெளிநாடுகளில் வாழும் மக்கள் இந்தியர் எனச் சொல்லிக் கொள்ள பெருமை கொள்கின்றனர். அமெரிக்காவின் எந்த அதிபரும், இந்தியப் பிரதமர் ஒருவரைப் பார்த்து இந்தியாவின் தந்தை என்று கூறியதில்லை. உலகில் எந்த தலைவரைப் பார்த்தும் பேசவில்லை. அமெரிக்க அதிபர் ஒருவர் முதல்முறையாக இதுபோன்ற பெருமையான வார்த்தையை இந்தியப் பிரதமர் ஒருவரைப் பார்த்து பேசியுள்ளார்.
இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதை பெருமையாக நினைக்காதவர்கள் இந்தியர்களாகக் கருதவேண்டாம்" எனத் தெரிவித்தார்.