ரூபாய் நோட்டு தடை வந்தும் ‘ஊழல் செழிப்பாக’ வளர்கிறது... பிரதமர் மோடி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு!
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழலை ஒழிக்க ரூபாய் நோட்டு தடையை கொண்டு வந்தபின்னும், நாட்டில் ஊழல் செழிப்பாக வளர்கிறது. ரூபாய் நோட்டு தடை என்பது மிகப்பெரிய தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விமர்சனம்
ரூபாய் நோட்டு தடை கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டு கடந்த 8-ந்தேதி நிறைவடைந்தது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும், திட்டங்களையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் நேற்று மீண்டும் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் டுவிட்டரில் பதவிட்டு இருப்பதாவது-
முட்டாள்தனமாது
ரூபாய் நோட்டு தடை கொண்டுவரப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது, இந்த முடிவுக்கு இன்னும் நியாயம் தேடி, என்ன காரணத்தை அரசு கூறினாலும் அது முட்டாள்தனமானது. கருப்பு பணத்தை ஒழித்துவிட்டது, ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டுவந்துவிட்டது என்று எளிமையாகக் காரணம் கூறலாம்.
ரூ.41 கோடி கள்ளநோட்டு
ஒரு ஆண்டுக்குப்பின், நாங்கள் கூறியதுபோல், செல்லாத ரூபாய் நோட்டுகளில் ரூ.15.28 லட்சம் கோடி பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிவந்துவிட்டது. ரூ.41 கோடி மதிப்புள்ள பணம் மட்டுமே கள்ள நோட்டுகளாகும்.
ஆதாலால், ரூபாய் நோட்டுதடை என்பது கள்ள நோட்டுகளை ஒழிக்க சரியான தீர்வு அல்ல. ஆனால், ரூபாய் நோட்டு தடை கொண்டு வரும்போது பேசி பிரதமர் மோடி, இதன் மூலம் ஊழல், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்றார்.
ஊழல் வளர்கிறது
ரூபாய் நோட்டு தடை கொண்டுவந்தபோதிலும், இன்னும் ஊழல் செழிப்பாக இருந்து வருகிறது. லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு, படிபட்டு வருகின்றனர்.
கருப்புபணத்தைப் பொருத்தவரை, வரி செலுத்தக்கூடிய வருமானம் என்பது நாள்தோறும் உருவாகிறது. அதில் குறிப்பிட்ட அளவு வருமானம் மட்டும் வரிசெலுத்தாமல் தப்பித்து, வேறு வழிக்கு செல்கிறது. அதாவது, லஞ்சம் கொடுப்பது, தேர்தலுக்கு நிதி அளிப்பது, நன்கொடை அளிப்பது, சூதாட்டம், அன்றாடம் தொழிலாளர்களை நியமிப்பது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.