கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சசிகலா முதலமைச்சராக, அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பன்னீர்செல்வம், தனி அணியை உருவாக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, 2 அணிகளாக செயல்வட்டு வருகிறது. இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சிறைக்கு சென்றார்.

இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், பதவி பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களுக்குள் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள், சென்னை புறநகர் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதில் கலந்து கொள்ளும் எம்எல்ஏக்களின் வாக்குகளை பொருத்து, முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.

இந்நிலையில், எம்எல்ஏ மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாக இருக்கும். மேலும் எதிர் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் பலர், ஓ.பி.எஸ்ஸுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.