சட்டப்பேரவையை கலகலக்க வைத்த தமிமுன் அன்சாரி!
ராமராஜ்ஜிய ரத யாத்திரை இன்று தமிழகம் வந்ததை அடுத்து, சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியின் போராட்டத்தால் சட்டப்பேரவையில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. கேரளாவைக் கடந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்துள்ளது. அயோத்தியில் தொடங்கி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வரும் 25 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் சட்டசபையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஆனால், பேரவை தலைவர் தனபால் அனுமதி மறுத்ததால், அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த ரதயாத்திரையால் சமூகம் சார்ந்த கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால், போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல தடைகளையும் மீறி நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்குள் ரத யாத்திரை வந்துள்ளது.
ங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. பின்னர் மதுரை வழியாக வரும் 25 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது. ரதயாத்திரை தமிழகத்திற்குள் அதே வேளையில், செங்கோட்டையில் எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை வழியாக ராமராஜ்ஜிய ரத யாத்திரை இன்று வந்ததை அடுத்து, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
சட்டப்பேரவையில் மும்மூர்த்தி என்று அழைக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். தமிமுமன் அன்சாரி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகர் இருக்கையை நோக்கி விரைந்து வந்தார். ரத யாத்திரக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட தமிமுன் அன்சாரியை, சபாநாயகர் இருக்கையில் அமரும்படி கூறினார்.
ஆனாலும், தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தமிமுன் அன்சாரிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏக்களும் கோஷமிட்டனர். பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய தமிமுன் அன்சாரி, சாலை மறியலில் ஈடுபட முயன்றார் அப்போது அவரை போலீசார் கைது
செய்தனர். தமிமுன் அன்சாரியின் போராட்டத்தால் சட்டப்பேரவையில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.