30 ஸ்லீப்பர்செல் இருக்காங்க..! முடிந்தால் அதிமுகவில் இருந்து நீக்கி பார்க்கட்டும்..! சவால் விடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ..!
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட எங்களை யாராலும் நீக்க முடியாது எனவும் எங்களிடம் 30 ஸ்லீப்பர்செல் இருக்காங்க எனவும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்,தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் வேலூர் எம்.பி. செங்குட்டுவன்,தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால் கட்சி தாவல் தொடரும் என கூறப்பட்டு வந்தது.
ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்வி குறித்து,அதிமுக தலைமை செயலகத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அதிமுகவின் 6 மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி அதிரடியாக நீக்கியது.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 4 மாவட்ட செயலாளர்களை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். வட சென்னை, வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வெற்றிவேல் நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து என்.ஜி.பார்த்திபன் விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ரெங்கசாமியும், தேனி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தங்க தமிழ்செல்வனும் நீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோல் அதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வி.பி.கலைராஜன், கட்சியில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, தினகரன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பாலசுப்பிரமணி, 2007 ஆம் ஆண்டு ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருக்கும்போது எங்களை மாவட்ட அம்மா பேரவை செயலாளராக நியமித்தார் எனவும் எங்கள் இயக்கத்தில் நியமிக்கவும் நீக்கவும் உரிமை உள்ள ஒரே நபர் பொதுச்செயலாளர் மட்டும்தான் எனவும் தெரிவித்தார்.
எங்களை நீக்குவதற்கும் நியமிப்பதற்கும் தற்போது ஆட்சியை ஆளும் யாருக்கும் உரிமையும் இல்லை அருகதையும் இல்லை எனவும் டிடிவி ஆதரவாளர்களை நீக்கவேண்டுமென்றால் ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒன்னே கால் கோடி தொண்டர்களை அவர்கள் நீக்க வேண்டி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எடப்பாடி தரப்பில் உள்ள 111 பேரில் 30 பேர் எங்கள் ஸ்லீப்பர்செல்லாக உள்ளனர் எனவும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.