ஆளுரின் செயல் கண்ணியமானதா? துளியும் ஏற்புடையதல்ல...! ஸ்டாலின், கனிமொழி கருத்து
பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிக் கொடுத்த ஆளுநர் பற்றி விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பொது வாழ்வில் இருப்போர் கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று மு.க.ஸ்டாலின், கனிமொழி கருத்து தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாரணைக் குழு, போலீஸார் விசாரணை
என நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இது குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியை நான் பார்த்ததுகூட இல்லை என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். செய்தியாளர்கள் உடனான சந்திப்புக்குப் பிறகு, பெண் செய்தியாளர் ஒருவரிடம் சென்ற அவர், நீ என் பேத்தி போல் உள்ளாய் என்று கூறி அவரது கன்னத்தை தடவினார். ஆளுநரின் இந்த செயல் பெண் பத்திரிகையாளர் உட்பட அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் இந்த செய்கையை தாம் வெறுப்பதாக அந்த பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். என் அனுமதி இல்லாமல் கன்னத்தை அவர் தட்டுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது தவறு. அறிமுகம் இல்லாத ஒரு நபரின், அதுவும் பெண்ணின் கன்னத்தைத் தொடுவது முறையானது அல்ல. என்னுடைய முகத்தை நான் பலமுரற கழுவிவிட்டேன். இதனால் எனக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீண்டும் பாலியல் சர்ச்சையில்
சிக்கியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் இந்த செய்கை குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொடிழ ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல; அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்குத் துளியும் ஏற்புடையது அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
கனிமொழி எம்.பி. தனது பேஸ்புக்-ல், நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். பெண் பத்திரிகையாளரின் அனுமதி இல்லாமடல் அவரைத் தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்து, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்று பதிவிடுள்ளார்.