ஆட்சியமைக்க நாளை உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்.. பதவியேற்பு விழாவில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி..!
தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்.
நடத்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 158 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். இதனையடுத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை மாலை 6.30க்கு சந்தித்து ஆட்சிமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்.
பின்னர், மே 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறும் விழாவில், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைக்கிறார். மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பதவி ஏற்பு விழாவுக்கு ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு, மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.