அண்ணா சாலை அலறணும்... மெரினாவ மிரட்டணும்! திமுகவிற்கு மாஸ்டர் ஸ்கெட்ச் போடும் அழகிரி!
சென்னை அண்ணா சாலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை சுமார் 1 லட்சம் பேரைத் திரட்டி அமைதிப் பேரணி செல்லும் அழகிரி, தி.மு.க.வின் எதிர்காலத்தை அசைத்துப் பார்க்கும் அளவிற்கு ப்ளான் போட்டுள்ளாராம்.
திமுக அதிமுக எனும் இரண்டு பிரம்மாண்ட கட்சிகளுமே , தலைமையை இழந்து தவித்து கொண்டிருக்கும் தருணமிது. செல்வி ஜெயலலிதா , கலைஞர் கருணாநிதி போன்ற அரசியல் ஆளுமைகளை இனி தமிழகம் காணுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.
இதில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சிதறிப்போயிருக்கிறது அதிமுக.
கலைஞரின் மறைவிற்கு பிறகு இதே மாதிரியான ஒரு பிளவு ஏற்படும் சூழல் தற்போது திமுகவிலும் ஏற்பட்டிருக்கிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னுடைய ராஜ தந்திரங்களால் திமுகவை கட்டி காத்து வந்த கலைஞரின் மறைவிற்கு பிறகு இப்படி ஒரு சூழல் உருவாக காரணமாகி இருப்பது அவரது மகன் அழகிரி தான்.
கலைஞரின் மறைவிற்கு பிறகு அரசியல் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்போது அழகிரியின் செயல்பாடுகள் தான் இருக்கின்றன.
கலைஞரின் நினைவிடத்தில் மலர்மாலையை வைத்து வணங்கிவிட்டு தன் அரசியல் பயணத்திற்கான ஆரம்ப செய்தியை அழகிரி உதிர்த்தது அரசியல் உலகறிந்த சம்பவம். தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டி தான் உச்ச கட்ட சிறப்பே. அந்த பேட்டிக்கு பிறகும் ஸ்டாலின் அவரை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துவிடவே அப்சர் ஆன அழகிரி அதகளம் செய்ய ஆரம்பித்துவிட்டார். திமுக கட்சி உடையப்போகிறது.
விசுவாசிகள் என்பக்கம் என்று அவர் சொன்னது குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி “வீட்டிலிருப்பவர்களை குறித்து பேசுங்கள் விருந்துண்ண வந்தவர்கள் குறித்து பேசாதீர்கள்” என நோஸ் கட் செய்ய, தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஓசிச் சோறு தின்பவர்கள் அது பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை’என்று விளாசியிருக்கிறார் தயாநிதி அழகிரி.
அழகிரி தரப்பில் அடுத்தடுத்து எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் திமுகவிற்கு சாதகம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் அமைதி காத்து வருகிறார் ஸ்டாலின்.
ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் பேச வேண்டியதை பேசி அழகிரியின் கோபத்திற்கு தூபம் போட தான் செய்கிறார்கள்.
தன்னை குறித்து வரும் விமர்சங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக அதிரடி செயல்பாடுகளில் இறங்கி இருக்கும் அழகிரி செப்டம்பர் 5 அன்று இரங்கல் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்து மாஸ் காட்ட திட்டமிட்டிருக்கிறார்.
சென்னையில் தங்கி இருக்கும் அழகிரி, வரும் 20 ஆம் தேதி மதுரை வந்து தென் மண்டலம் தவிர, மத்திய மண்டலம், கொங்கு மண்டலம் என விசிட் அடிக்கவிருப்பதாகவும், அப்போது புதிய அமைப்பின் பெயரில் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசிக்க விருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் புதிய கட்சி தொடங்க போகிறார் என்று ஒரு பக்கமும், திமுகவில் தான் தன் பலம் என்ன என்பதை காட்ட போகிறார் என்று இன்னொரு பக்கமும் பரபரப்பான கருத்துக்கள் நிலவிக்கொண்டிருக்கும் வேளையில் அழகிரியுடன் இருப்பவர்கள் அவரது பாணி கலைஞர் போன்றது.
“நீ வந்தால், உன்னோடு...
வரா விட்டால், தனியாக...
எதிர்த்தால், உனை வீழ்த்தி விட்டு...!”
இது தான் அழகிரியின் தாரக மந்திரம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மூன்று வரிகளிலும் அவர் சொல்வது ஸ்டாலினை தான் அவர் குறிக்கிறார் என்றால், திமுகவில் ஒரு சிறப்பான யுத்தம் நடக்கப்போவது உறுதி.