ஒபிஎஸ்சுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு - பேச்சுவார்த்தைக்கு முதல் அடித்தளம்...!!!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி அணியை சேர்ந்த 2 அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து செயல்பட்டு வருகிறது.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஓபிஎஸ் அணி தனி ராஜாங்கம் நடத்தி வந்தது.
ஒபிஎஸ் அணியை எடப்பாடி அணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுக்கடித்து வந்தது.
இதனால் ஒபிஎஸ் பேச்சுவார்த்தை தோல்வி எனவும் அணிகள் இணையாது எனவும் அறிவித்தார். இதனிடையே ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடப்பாடி தரப்பினர் சொல்லி வந்தனர். அதன்படி தினகரனை முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.
மேலும், நேற்று ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கபடும் எனவும், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை ஒபிஎஸ் தமது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்தவமனையில் உள்ள ஒபிஎஸ் தாயாரை எடப்பாடி அணியை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் ஒபிஎஸ்சுடன் இரண்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இரு அணிகளும் இணையும் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில், இவர்களின் சந்திப்பு மிகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது.