தெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.!
நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் முதல்வர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்களிலேயே சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். தமிழக அமைச்சரானது முதலே அவர் தொடர்ச்சியாக வம்படி பேசி வருவதாகப் புகார்கள் வாசிக்கப்படுகின்றன. ஈஷா யோகா ஜக்கி, பாஜகவின் வானதி சீனிவாசன் என பலருடன் ட்விட்டரில் சண்டையே நடத்தினார். தற்போது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்மால் போனது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அவரை பாஜகவினர் குடைந்து வருகின்றனர். அதற்குப் பதிலடியாக பாஜகவினரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார் பழனிவேல் தியாகராஜன்.
இந்நிலையில் திமுக எம்பியும், அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன், “ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பணியில் கவனம் செலுத்த பழனிவேல் தியாகாரஜனுக்கு அறிவுரை வழங்குவோம்” என்று கூறியிருந்தார். இதற்கிடையே இன்று பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு பலரையும் முகம் சுழிக்க வைத்தது. அதில், “முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்க கூட விபரம் அறியாதவர், கட்சியின் இரண்டு தலைமைகளாலும் ஓரங்கட்டப்பட்டவர்” எனப் பெயர் எதையும் குறிப்பிடாமல் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்தார். அறிவுரை கூறிய டி.கே.எஸ்.இளங்கோவனை, பழனிவேல் தியாகராஜன் கடுமையான சொற்களால் அர்ச்சித்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த ட்விட்டர் பதிவை பழனிவேல் தியாகராஜன் நீக்கிவிட்டார்.
இந்நிலையில் பழனிவேல் தியாகராஜனின் இந்த ட்விட்டர் பதிவை பகிர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை கருத்திட்டுள்ளார். அதில், “தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் தன் தினசரி வேலைகளை திறம்பட செய்வதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் தமிழக முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.